இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்ற 'மார்வெல்'.. பல்லாயிரம் கோடி கடன்.. மீண்டு வந்த கதை
மார்வெல் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்று அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மார்வெல் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். கடைசியாக வெளியான ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகளவில் $2.2 பில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகிறது.

இன்று பில்லியன் கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்து வரும் மார்வெல் திரைப்படங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஒரு காலத்தில் மார்வெல் நிறுவனம் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்றது. அதைப்பற்றி தீவிர மார்வெல் ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில், மார்வெல் நிறுவனம் தங்களுடைய வீழ்ச்சியிலிருந்து எப்படி மீண்டு வந்தது, அதன் பின்னணியில் உள்ள கதை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
மார்வலின் வீழ்ச்சி
90-களில் மார்வெல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ. 2,500 கோடி. 90-களின் இறுதியில் மார்வெல்லின் காமிக்ஸ் விற்பனை சரிந்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. மார்வெல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பல கடன்களை வாங்கி கடன்காரர்களாக மாறினார்கள்.

1996 டிசம்பர் 27-ஆம் தேதி அன்று மார்வெல் திவால் மனுவை தாக்கல் செய்தது. ரூ. 5,000 கோடி கடன், மார்வெல்லின் ஷேர் ரூ. 2,800-ல் இருந்து ரூ. 150-ஆக சரிந்தது. இதனால் தங்களால் இனி இந்த துறையில் நீடிக்க முடியுமா என்கிற கேள்வி மார்வெலுக்கு எழுகிறது.
விற்பனை செய்யப்பட்ட கதாபாத்திரங்கள்
இவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் பிடித்த ஸ்பைடர்-மேன் கதாபாத்திரத்தை சோனி நிறுவனத்திடம் மார்வெல் விற்பனை செய்கிறது. X-Men மற்றும் Fantastic Four ஆகியவை 20th Century Fox நிறுவனத்திடம் விற்கப்பட்டது. மேலும், Blade, Ghost Rider, Hulk மற்றும் Punisher போன்ற கதாபாத்திரங்களை வெவ்வேறு நிறுவனங்களிடம் மார்வெல் விற்றுவிட்டது.

மீதமிருந்த சூப்பர் ஹீரோஸ்
2005-ஆம் ஆண்டு மார்வெல் நிறுவனம் தனது பிரதான கதாபாத்திரங்களை எல்லாம் விற்பனை செய்துவிடுகிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் இருந்த ஒருசில கதாபாத்திரங்கள் மட்டுமே அப்போது மார்வலிடம் இருந்தன. அதுதான் கேப்டன் அமெரிக்கா, அயன் மேன், Thor, Black widow மற்றும் Hawkeye போன்ற கதாபாத்திரங்கள்.

மார்வலின் எழுச்சி
இப்போது, இந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள கதாபாத்திரங்களை வைத்து திரைப்படம் எடுக்க மார்வெல் முடிவு செய்கிறது. இதற்காக ரூ. 4000 கோடி கடன் வாங்குகிறது. சரி, எந்த கதாபாத்திரத்தை வைத்து முதலில் திரைப்படம் எடுக்கலாம் என எண்ணியபோது, அயன் மேன் கதாபாத்திரத்தை வைத்து எடுக்க முடிவு செய்கிறார்கள். அதில் ஹாலிவுட் திரையுலகில் தோற்றுப்போன ஹீரோவாக இருந்த Robert Downey Jr.-ஐ டோனி ஸ்டார்க்காக வைத்து அயன் மேன் படத்தை எடுக்கிறார்கள்.

மே 2-ஆம் தேதி 2008-ஆம் ஆண்டு அயன் மேன் 1 திரைப்படம் வெளியாகிறது. இப்படம் கண்டிப்பாக தோல்வியை தழுவும் என எதிர்பார்த்த நிலையில், படம் வெளிவந்து உலகளவில் பட்டையை கிளப்பி ரூ. 5,000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கிறது. இதன்பின், மார்வெல் பயன்படுத்திய மிகப்பெரிய யுத்தி தான் 'Post Credit Scene'. அயன் மேன் திரைப்படத்தின் இறுதியில், Nick Fury கதாபாத்திரம் "I m here to talk to you about the Avengers Initiative" என வசனத்தை கூறும். இதன்மூலம், அயன் மேன் என்பது ஒரு திரைப்படம் அல்ல, இது ஒரு யூனிவர்ஸ் என்பதை மார்வெல் கொண்டு வந்தது.

'அவெஞ்சர்ஸ்'
அயன் மேன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து Thor, கேப்டன் அமெரிக்கா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. 2009-ஆம் ஆண்டு ரூ. 30,000 கோடி கொடுத்து டிஸ்னி நிறுவனம் மார்வெல்லை வாங்குகிறது. இதன்பின், 2012-ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்' $1.5 பில்லியன் வசூல், 2015-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் $1.40 பில்லியன் வசூல், 2018-ல் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' $2.05 பில்லியன் வசூல், 2019-ல் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' $2.72 billion வசூல் செய்து மாபெரும் சாதனைகளை படைத்தன.

ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதே என்கிற சூழ்நிலையிலிருந்து, இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மார்வெல் வளர்ந்துள்ளது. இது தன்னம்பிக்கைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.