Policy

பதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...

வணக்கம் நண்பர்களே!

பதிவுகள் படைப்புக்கள் அனுமதியின்றி மீள்பதிவு செய்வது பற்றிய இந்தக் குறிப்பினை எழுதுவது தொடர்பில் ஆதங்கங்கள் இருந்த போதும், எழுதியே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு

ஊடகவெளியின் அன்மைக்கால நிகழ்வுகள் சிலஅமைந்துள்ளமையால், இதனை இங்கு குறிப்பிடவிழைகின்றோம்.

எமது தளத்தில் வெளியாகும் செய்திகள் படைப்புக்கள் அனைத்தும்,யாழ்ஓசைக்கென அதன் செய்தியாளர்களாலும், படைப்பாளிகளாலும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் எமக்குச் செய்திகள் தரும் செய்தியாளர்கள் சிலர், பிற செய்தித் தளங்களுக்கும் செய்திகள் வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும் அவர்களிடமும் எங்கள் தளத்துக்கான செய்திகளைத் தனித்துவமாகவே எழுதக்கோரியுள்ளோம். அவ்வாறு செயற்படாத செய்தியாளர்களைத் தவிர்த்தும் வருகின்றோம்.

அதேவேளை குறித்த ஒரு செய்தி முக்கியமாகக் கருதப்படும் பட்சத்தில், அச் செய்தி எமது தளத்திற்குக் கிடைக்கப்பெறாத பட்சத்தில், அச் செய்தியினை பிறிதொரு தளத்தில் இருந்து  மறு பிரசுரம் செய்யும் போது, அத் தளத்திற்கான நன்றிகளுடன் அவற்றை மீள்பதிவு செய்கின்றோம்.

படைப்புக்கள் தொடர்பில் வலைப்பதிவுகள், பிற செய்தித் தளங்கள் என்பற்றில் தரமான ஆக்கங்கள் இருக்கும் போது, அவர்களிடம் முறையான அனுமதி பெற்று, அவர்களுக்கான நன்றிகளுடனும், இணைப்புக்களுடனும் மீள்பதிவு செய்து வருகின்றோம். எங்கள் தளத்தில் அவ்வாறில்லாத ஏதாவது படைப்புக்கள் காணப்படுமாயின் மின்னஞ்சல் மூலம் அதனை எமது ஆசிரிய பீடத்திற்கு உடன்அறியத்தர வேண்டுகின்றோம்.

இதேவேளை  எங்கள் படைப்பாளிகளாலும், செய்தியாளர்களாலும், எமது தளத்திற்கெனத் தயாரிக்கப்படும் படைப்புக்களை, எங்கள் அனுமதியின்றியும், எங்கள் தளத்தில் பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெரிவிப்பும் இன்றி, பல தளங்களும், பல வலைப்பதிவுகளும், பிரதி செய்து, தங்கள் சொந்தப் படைப்புக்கள் போல் வெளியிடுகின்றன. இது வருந்தத் தக்கதும் அநாகரீகமானதுமாகும்.

கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இது தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த போதும், கட்டற்றவகையில், இச் செயற்பாடுகள் தற்போது அதிகரித்திருப்பதால் இக் குறிப்பினை இங்கு எழுத வேண்டிய கட்டாயநிலைக்கு ஆளாகியுள்ளோம். இது ஒரு வருந்தத் தக்க விடயமாக இருந்த போதும், தவிர்க்க முடியாத நிலையிலேயே இங்கு இதனைப் பதிவு செய்கின்றோம்.

எங்கள் தளத்தில் பிரசுரமாகும் செய்திகள் படைப்புக்களை, உங்கள் தளங்களில் மீள்பதிவு செய்வதாயின், தயவு செய்து எங்கள; அனுமதி பெற்றுச் செய்யுங்கள். அல்லது எங்கள் தளத்திலிருந்து பெறப்பட்டதற்கான அறிவிப்பினைக் கொடுத்துச் செய்யுங்கள். அவ்வாறு செய்யப்படாத பதிவுகள் அனைத்தும் படைப்புத் திருட்டு என்ற வகையிலேயே கருதப்படும் .

இந் நிலை தொடரும் பட்சத்தில், அவ்வாறு செய்பவர்கள் குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது என்பதனையும், யாழ்ஓசை  ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தித்தளம் என்ற வகையில், மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து  கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

இவ்வாறானதொரு அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாத போதும், எங்களை அவ்வாறான ஒரு நிலைக்கு உள்ளாக்கியிருப்பது உங்கள் செயற்பாடுகளே என்பதையும் இங்கே வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

என்றும் இனிய நட்புடன்

யாழ்ஓசை குழுமம்