Sing Geetham: திரை விமர்சனம்

Sing Geetham: திரை விமர்சனம்

94 வயதில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ள "சிங் கீதம்" தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

 

கதைக்களம்

குபேரபுரம் என்கிற தங்கம் நிறைந்த கிராமத்திற்கு பிரதாப் (அயான்) வருகிறார். வந்த முதல் நாளே, பொட்டல் காடாக இருக்கும் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தை நேசிக்கும் கௌரியுடன் சண்டையிடுகிறார்.

அதே சமயம் பழைய சுரங்கம் மூடப்பட்ட நிலையில், புதிய சுரங்கத்தை வைத்து நைஜீரிய தொழிலதிபருடன் ஒப்பந்தம் போடுகிறார் ரேணு. ஆனால், அவரோ இன்னொரு பார்ட்னர் அல்லது அவரது வாரிசு வந்தால்தான் ஒப்பந்தம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார்.

 

Sing Geetham: திரை விமர்சனம் | Sing Geetham Movie Review

அச்சமயம் தங்கச்சுரங்கத்தில் தனது அப்பாவிற்கும் பங்கு உள்ளதை கூறி பிரதாப் அங்கு வருகிறார். ஆனால், தற்போதைய சுரங்கத்தில் தங்கம் இல்லை என்கிற உண்மையை போட்டுடைக்கிறார். அதன்பின்னர் கௌரி நேசிக்கும் மரம் இருக்கும் இடத்தில் தான் தங்கம் இருப்பதாக அதனை அடியோடு வெட்டி சாய்கிறார்கள்.

அதனால் கோபமும், சோகமும் அடையும் கௌரி மலைக்குன்றில் இருக்கும் கடவுளிடம் முறையிட, அங்குள்ள குகைக்குள் தவறி விழுகிறார். அங்கு அவர் கிராம மக்களை சபிக்கும் வகையில் ஒரு விஷயம் கூறுகிறார். பின் அவர் மீட்கப்பட, கிராம மக்கள் அனைவரும் பேசினால் பாடலாக தான் கேட்கிறது.

Sing Geetham: திரை விமர்சனம் | Sing Geetham Movie Review

அதாவது எதை பேசினாலும் ராகத்துடன் பாடலால் தான் அவர்களால் கூற முடியும். இதனால் அதிர்ச்சியடையும் கிராம மக்கள் இது எப்படி நடந்தது என்று கண்டுபிடித்தார்களா? அவர்களின் சாபம் எப்படி நீங்கியது? என்பதே மீதிக்கதை. 

படம் பற்றிய அலசல்

தமிழில் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், சின்ன வாத்தியார், காதலா காதலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பழம்பெரும் இயங்குநரான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், 94 வயதில் இப்படத்தை கொடுத்துள்ளார்.

தங்கத்திற்கான தேடல் என்றாலே விறுவிறுப்பான திரைக்கதையில் தான் படம் செல்ல வேண்டும். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர் . ஆரம்பத்தில் இப்படியொரு கிராமம் எங்கய்யா இருக்கும் என்பது போல் அந்நியமாக தான் தோன்றுகிறது. ஆனால், சாபம் தொடங்கியவுடன் நாமும் கதையுடன் ஒன்றிவிடுவோம்.

Sing Geetham: திரை விமர்சனம் | Sing Geetham Movie Review

 

சுமார் அரைமணிநேரம் வரை தான் நாம் இப்படத்தில் வசனங்களை கேட்க முடியும். அதன் பின் வசனங்களை பாடல்களாக தான் பார்க்க முடியும். முதலில் என்னடா இது என்று தோன்றினாலும் போக போக அட இதுகூட புதுசா நல்லா இருக்கே என்று தோன்றும். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக தொடங்கினாலும், கண்டிப்பாக இதற்கு பின் வலுவான ஒரு காரணம் இருக்கும் என்று நாம் நினைக்கையில், பிளாஷ்பேக்கில் அதற்கு ஏற்ப நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

கிளைமேக்ஸ் கண்டிப்பாக நல்ல எமோஷனல் பீலிங் கொடுக்கும். என்றாலும் ஒட்டுமொத்தமாக ஜாலியான, வித்தியாசமான அனுபவமாக இப்படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ அயான், ஹீரோயின்கள் அஹில்யா, ஷாலினி ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர்.

 

Sing Geetham: திரை விமர்சனம் | Sing Geetham Movie Review

துளசி உட்பட பிற கதாபாத்திரங்களும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர். இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாஸ ராவ் தனக்கே உரித்தான காமெடி பாணியை சிறப்பாக கையாண்டுள்ளார். அவருக்கு பக்கபலமாக உதவியிருப்பது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். படம் முழுக்க ரசிக்கும்படி வாசித்து தள்ளியிருக்கிறார்.  

க்ளாப்ஸ்

வித்தியாசமான முயற்சி

திரைக்கதை

இசை

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

சில லாஜிக் மீறல்களை சரி செய்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த சிங் கீதம் அனைவரையும் கவரும் இனிய இசை. வித்தியாசமான திரை அனுபவத்தை பெற இப்படத்தை காணலாம். 

Sing Geetham: திரை விமர்சனம் | Sing Geetham Movie Review

 

LATEST News

Trending News