நடிகை மீரா மிதுனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு: எத்தனை நாள் தெரியுமா?
நடிகையும், சூப்பர் மாடலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமீதுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இதனை அடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மீராமிதுன் திடீரென தலைமறைவாக கூறப்பட்ட நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் மீராமிதுன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து நேற்று மாலை கேரளாவில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் மீராமிதுனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். குற்றவியல் 17வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன் ஆஜர்படுத்தப்பட்ட மீராமிதுன் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.