முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய ஜெய்.. கூடவே அமைச்சர் கீர்த்தனாவும்!
சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபாவின் மகனாக 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்த விஜய் இன்று தனது 52வது வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த விஜய் அதன் பின்னர், தனது அப்பா டைரக்ஷனில் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.
விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் அடியெடுத்து வைத்தார் விஜய். இளைய தளபதியாக மாஸ் காட்டிய விஜய் கில்லி படத்தின் வெற்றியுடன் ரஜினிகாந்துக்கு இணையாக பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.
சம்பளமும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. ஜெயிலர் மற்றும் லியோ படங்கள் ஒரே ஆண்டில் பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விஜய்யின் அதிகபட்ச பாக்ஸ் ஆபீஸ் சிம்மாசனமாக மாறியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட ஜன நாயகன் படத்துக்கு அதிகப்பட்சமாக 250 கோடி வரை சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகராக உயர்ந்த விஜய் அத்தனையையும் தூக்கிப் போட்டு விட்டு மக்களுக்காக சேவை செய்யப் போகிறேன் என கட்சியை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாளை முதலமைச்சராக கொண்டாடுகிறார்.
எம்ஜிஆருக்குப் பிறகு: தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு ஹீரோ அரசியல் கட்சியைத் தொடங்கி முதலமைச்சர் ஆக முடியுமா என்கிற ஏகப்பட்ட கேள்விகளுக்கு தனிக்கட்சி தொடங்கி பல தடைகளை தாண்டி கப்பு முக்கியம் பிகிலு என சொன்னது போலவே கப்பை ஜெயித்துக் காட்டியுள்ளார் விஜய். தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறியுள்ள நிலையில், அவரது பிறந்தநாளை கட்சியினரும் சினிமா பிரபலங்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அமைச்சர் கீர்த்தனாவுடன் ஜெய் கொண்டாட்டம்: நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா இருவரும் நேற்று நள்ளிரவு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணியளவில் வாணவேடிக்கைகள் வெடித்து விஜய் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் கொண்டாடுவாரா?: ஆனால், நேற்று துரதிர்ஷ்டவசமாக பெரியபாளையத்தில் உள்ள இறால் கம்பெனியில் அமோனியா வாயு கசிந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்ற அரசு போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விஜய் கலந்துக் கொள்வது சந்தேகம் தான் என்கின்றனர். ஆனால், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மற்றும் தளபதி ரசிகர்கள் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்யவுள்ளனர்.