அட்லீயின் ராக்கா.. ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வேலைகள் எல்லாம் செமயா இழுக்குதாம்
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் பயணத்தை தொடங்கிய அட்லீ இப்போது இந்திய அளவில் சக்சஸ்ஃபுல் இயக்குநராக வலம் வருகிறார். பாலிவுட்டில் அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் மொத்தம் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளியது. இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற படத்தை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஷங்கரிடம் வேலைகள் கற்றுவிட்டு; ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ வரிசையாக தமிழில் விஜய்யை வைத்து மட்டுமே படங்களை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய படங்களில் பிகில் தவிர்த்து அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன அல்லது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. வரிசையாக அவர் வெற்றியை கொடுத்தாலும்; அட்லீ சொந்தமாக கதையை யோசிப்பதே இல்லை; மற்ற படங்களிலிருந்து காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் வந்தது.

மேக்கிங் சூப்பர்: அதேசமயம் கதையை காப்பி அடித்தாலும் மேக்கிங்கில் பட்டையை கிளப்பிவிடுகிறார் என்ற பாராட்டும் எழாமல் இல்லை. அவர் வைக்கும் ஃப்ரேம்கள் எப்போதுமே ரிச்சாகவும், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் இருக்கும். அதனால்தான் ஒரு இயக்குநராக சினிமாவில் விமர்சனங்களை சந்தித்தாலும் நீடிக்க முடிகிறது என்று பலர் சொல்வதுண்டு. தமிழில் விஜய்யை தவிர்த்து வேறு யாருடனும் பணியாற்றமாட்டாரா என்று கேள்வி எழும் அளவுக்கு விஜய்யின் குட் புக்கில் இருந்தார்.
ஹிந்தியில் அட்லீ: இப்படிப்பட்ட சூழலில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை இயக்கினார். அப்போது அட்லீ அவருடைய உருவத்தை வைத்து கிண்டல் செய்யப்பட்டார். அவர் அதையெல்லாம் தனக்கான உரமாக வைத்துக்கொண்டு ஷாருக்கான் மட்டுமின்றி பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார். படம் மெகா ஹிட்டாகி 1000 கோடி ரூபாயை அள்ளியது.
அல்லு அர்ஜுனுடன் படம்: அப்படத்தின் வெற்றி அட்லீயின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. இப்போது அவர் அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற படத்தை இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். படத்தின் சில பணிகளில் ஹாலிவுட் கலைஞர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தகவல்: இப்படத்தின் மீது தென்னிந்திய சினிமாவில் பலமான ஹைப் எகிறியிருக்கிறது. கண்டிப்பாக இதையும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாகத்தான் அவர் கொடுப்பார் என்று ரசிகர்கள் அடித்து சொல்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது முதலில் இப்படத்தின் ஷூட்டிங் இந்த வருடத்துக்குள் முடிந்து; அடுத்த வருடத்தில் ரிலீஸாகும் என கருதப்பட்டது. ஆனால் வேலைகள் நீள்வதால் ஷூட்டிங் அடுத்த வருடம்தான் முடியும் என்றும் 2028ஆம் ஆண்டு ரிலீஸாகும் எனவும் சொல்லப்படுகிறது.