Anbe Diana Day 3 Box Office - அன்பே டயானா மூன்றாவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் தப்பியதா?
சென்னை: பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவருடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற சூழலில்; அதன் வசூல் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன. அது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை தரும்படி அமைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் புதிய திறமையாக ஜொலிக்கிறார் பாரி இளவழகன். அவர் தன்னுடைய முதல் படமாக ஜமாவை இயக்கினார். அது தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலையும், திருவண்ணாமலை சுற்று வட்டார நிலவியலையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இளையராஜா இசையமைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இயக்கத்திலும், நடிப்பிலும் பாரி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரியின் அன்பே டயானா: அவர் இப்போது அன்பே டயானா படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்திருக்கிறார். பாரியுடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பாரியின் இரண்டாவது படம் என்பதால் இதன் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ட்ரெய்லரும் அதனை ஏற்றியே வைத்தது. சில நாட்களுக்கு முன்பு படம் ரிலீஸானது.
எப்படி இருக்கு படம்?: இந்தப் படமும் ரசிகர்களை கவரவே செய்திருக்கிறது. முதல் படத்தில் திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தை திரையில் கொண்டு வந்தது மாதிரி; இதில் பெரம்பூரை மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறார் பாரி. அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. முக்கியமாக படத்தில் அவர் உருவாக்கிய கேரக்டர்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, இது சாதாரண கதைதான் என்றாலும்; அதை தன்னுடைய ட்ரீட்மென்ட்டால் அனைவரையும் கவர செய்துவிட்டார் இயக்குநர்.
பாரியின் ஸ்பெஷல்: அதிலும் தெலுங்கு பேசும் ஹீரோ குடும்பத்தில் ரோஜாவும், சேத்தனும் நடிப்பில் பின்னியெடுத்துவிட்டார்கள். திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்களில் சேத்தனின் நடிப்பை பார்த்து கண்டிப்பாக சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிடும். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கிறார். ஜமாவைவிட ஒரு படி மேலே சென்றுதான் இப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். அதேபோல், தெலுங்கு பேசும் தாயாக ரோஜாவும் தன் பங்குக்கு மெர்சல் செய்திருக்கிறார். ஆகமொத்தம், இந்தப் படம் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
வசூல் நிலவரம்: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, மூன்றாவது நாளான நேற்று அந்தப் படம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலித்ததாம். அதற்கு முந்தைய நாட்கள் வசூலைவிடவும் நேற்றைய வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் 30 லட்சத்தையும் இரண்டாவது நாளில் 83 லட்சத்தையும் வசூலித்திருந்தது. மொத்தம் மூன்று நாட்களில் இந்தியாவில் அந்தப் படம் இரண்டு கோடியே 38 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது. படத்துக்கு பாசிட்டிவ் பேச்சுக்கள் இன்னமும் இருப்பதால்; கண்டிப்பாக வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாகி; வசூலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.