அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது: 'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்

அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது: 'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்

அந்த படத்தை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது என அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தின் ‘வலிமை’ உள்பட ஒரே நேரத்தில் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவ்வாறு அவர் தயாரித்து வரும் திரைப்படங்களில் ஒன்று அஜய் தேவ்கான் நடித்து வரும் ’மைதான்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக பல கோடி ரூபாய் செட் அமைக்கும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது. செட் அமைத்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் திடீரென லாக்டவுன் போடப்பட்டது. ஆறு மாதத்திற்கும் மேலாக லாக்டவுன் போடப்பட்டதால் படப்பிடிப்புக்காக போட்ட செட் முழுமையாக சேதமடைந்தது. இதனை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் இந்த செட் போடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அடித்த ட்வ்தேவ் புயல் இந்த செட்டை அப்படியே சூறையாடிக் கொண்டு சென்றுவிட்டதாகவும் இந்த செட் முழுவதும் சேதம் அடைந்து விட்டதாகவும் தெரிகிறது. இதனால் இரண்டாவது முறை கோடிக்கணக்கில் செலவு செய்து போடப்பட்ட செட் சேதமடைந்து விட்டதால் பயங்கர வருத்தத்தில் போனிகபூர் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறியபோது ’மைதான்’ படத்தை நினைத்து பார்த்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது. இந்த படத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. அதை நினைத்தாலே எனக்கு அழுகை வருகிறது. பட்ஜெட் செலவு நான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இப்போது அதை நினைத்துப் பார்ப்பது கூட எனக்கு கஷ்டமாக உள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். இந்த செட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு செட் போடப்பட்டபோது கலைத்துவிட்டு அதே பொருட்களை பயன்படுத்தி மீண்டும் செட் போட்டோம். ஆனால் இந்த முறை புயல் வந்து அனைத்தையும் நாசமாக்கி விட்டதால் மீண்டும் புதிதாக செட் போட வேண்டும், அதற்கு கோடிக்கணக்கான செலவு ஆகும்’ என்று போனிகபூர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES