துபாயில் டேட்டிங்.. இளையராஜா இசையால் மலர்ந்த காதல்.. காதலர் குறித்து மனம் திறந்த துஷாரா விஜயன்!
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாரியம்மா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை துஷாரா விஜயன். அந்த படத்தை தொடர்ந்து, தனுஷூடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன், விக்ரமுடன் வீர தீர சூரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். தற்போது துஷாரா விஜய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலன் மற்றும் தனது எதிர்காலக் கனவுகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை துஷாரா விஷயன்: அதில், நான் இரண்டு வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன், அவரை முதல் முதலில் துபாயில் தான் பார்த்தேன். நாங்கள் இருவரும் இளையராஜா சாருடைய இசை மூலமாகத்தான் connect ஆனோம். ஆனால், அந்த முதல் connection-க்கு பிறகு நிறைய விஷயங்கள் தொடர்ந்து வந்தன. இன்று நான் அவரை இவ்வளவு உறுதியாக நம்புகிறேன் என்றால், அதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. அவர் என்னுடைய எல்லா விஷயங்களையும் பொறுத்துக் கொள்கிறார். நானே இப்படி எல்லாத்தையும் பொறுத்துக்கொள்கிறார் என அவரை நினைத்து பாவப் பட்டதும் உண்டு, அவர் யார் என்பதை அதற்கான நேரம் வரும் போது சொல்கிறேன் என தனது காதலன் பற்றி பேசி உள்ளார்.

என் ஆசை: தொடர்ந்து பேசிய துஷாரா, பிரியங்கா சோப்ராவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் மீது ஏன் எனக்கு இவ்வளவு பிரியம் என்று எனக்கே தெரியாது. ஆனால், ஒரு பெண்ணாக அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை என்னை ரொம்பவே ஈர்த்துள்ளது. எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து ஒரு நல்ல ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதேபோல், என்னை ஒரு நடிகையாக சர்வதேச அளவில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் என் கனவுகளில் ஒன்று.
தன்னம்பிக்கை வேண்டும்: 7 வருடங்களுக்கு முன்பு, நான் இப்போது இருக்கும் இந்த இடத்தில் இருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால், இன்னும் 7 வருடங்கள் கழித்து நான் எங்கிருப்பேன் என்பது எனக்குத் தெளிவாக தெரியும். அந்த அளவிற்கு என் கனவுகள் மற்றும் பயணிக்கும் பாதை மீது எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஆசைப்படக்கூட தெரியாத வயதில், நான் நினைத்துக் கூட பார்க்காத நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. பெரிய இலக்குகளை நிர்ணயித்து, அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கான முயற்சிகளையும் நம்மால் தொடர்ந்து செய்ய முடியும். சரியான நேரத்தில் வாழ்க்கையும் நமக்கான வாய்ப்பைத் தரும் என நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
டாட்டூவின் ரகசியம்: வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசித்து வாழவே எனக்குப் பிடிக்கும். 'Carpe Diem' என்ற வார்த்தையை நான் தீவிரமாக நம்புகிறேன். அதை டாட்டூவும் போட்டு இருக்கிறேன். அதாவது, கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அந்த நேரத்திலேயே ரசித்து அனுபவித்து வாழ வேண்டும் என்பதுதான் என் கொள்கை. நான் எங்க போனாலும் அந்த இடத்தை அப்போதே ரசிப்பேன். அதை விட்டுவிட்டு வேறெதையோ யோசித்துக் கொண்டிருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.