சாய் பல்லவி பாவம்.. இப்படி திணறுறாங்களே.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?
சென்னை: கோலிவுட், டோலிவுட்டில் மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் சாய் பல்லவி. இரண்டு மொழிகளில் மட்டும் கலக்கிவந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். அங்கும் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டியிருக்கின்றனர். மே ஒன்றாம் தேதி அவரது முதல் ஹிந்தி படமான ஏக் தின் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தரமான வெற்றியை பெற்று சாய் பல்லவியை பாலிவுட்டில் பெரிய நடிகையாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து அனைரையும் ஒரே படத்தில் கவர்ந்தவர் சாய் பல்லவி. அதில் அவரது நடிப்பு பிரமிப்பைத்தான் கொடுத்தது. முதல் பட வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கொட்டி கிடைத்தாலும், அத்தனை வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், தனது பெயருக்கு களங்கம் வராத கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.

தென்னிந்தியாவில் டாப் நடிகை: அதன் காரணமாக அவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானரில் இருந்தன. முக்கியமாக அவரது கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இப்படி வரிசையாக படங்கள் வந்ததால் குறுகிய காலத்திலேயே தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி மற்றும் முக்கியமான நடிகையாக மாறினார். அவரை நம்பி எவ்வளவு கனமான கதாபாத்திரத்தையும் எழுதலாம் என்று இயக்குநர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையை பல்லவியும் காப்பாற்றுகிறார்.
அமரன் சாய் பல்லவி: அதேசமயம் தமிழில் தனக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை என்று ஒருமுறை வருத்தப்படவும் செய்திருக்கிறார் பல்லவி. அந்த வருத்தத்தையெல்லாம் அமரன் படம் போக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படத்தின் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணங்களில் சாய் பல்லவியும் ஒருவர். ஒவ்வொரு சீனிலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி எஸ்கேவைவிடவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். படம் மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
பாலிவுட்டில் சாய் பல்லவி: இப்படி தமிழ், தெலுங்கு என மாறி மாறி கலக்கிவரும் சாய் பல்லவி இப்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதாவது ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். அதற்கும் முன்னதாகவே சாய் பல்லவி ஏக் தின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் மே ஒன்றாம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இதில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ட்ரெண்டாகும் வீடியோ: படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. சமீபத்தில்கூட அமீர் கான் உள்ளிட்டோருக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதை பார்த்துவிட்டு பல்லவியை ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தார் அமீர். இந்நிலையில் ப்ரோமோஷனில் சாய் பல்லவி பேசியபோது ஹிந்தி திணறி திணறி பேசினார். அதை பார்த்த வட மாநில ரசிகர்களோ சாய் பல்லவிக்கு ஹிந்தியே தெரியவில்லை; இவர் எப்படி பாலிவுட் படத்தில் எல்லாம் நடிக்கப்போகிறார் என கேள்வி எழுப்புகிறார்கள். அதை பார்த்த பல்லவியின் ரசிகர்களோ, அதெல்லாம் நீங்கள் சும்மா இருந்தாலே போதும்; எங்கள் தலைவி நடிப்பில் பின்னி பெடலெடுத்திடுவார்; இன்னும் சில காலத்தில் ஹிந்தியும் சரியாக பேசுவார் என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.