அடடே இன்று சினேகா - பிரசன்னாவுக்கு திருமண நாளா? அதுக்குள்ள இத்தனை வருசம் ஆகிடுச்சா?
சென்னை: தமிழ் திரையுலகின் 'மேட் ஃபார் ஈச் அதர்' ஜோடி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா. திருமணத்திற்குப் பிறகும் அதே துடிப்புடனும், காதலுடனும் வலம் வரும் இந்த நட்சத்திர தம்பதியினர் இன்று தங்களது 14-வது திருமண நாளை இனிதே கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி சினேகா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினேகா மற்றும் பிரசன்னாவின் காதல் கதை ஒரு சினிமா படத்தைப் போலவே சுவாரசியமானது. 2009-ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் இருவரும் கணவன் - மனைவியாக நடித்தனர். அந்தப் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்து, பின்னாளில் அது ஆழமான காதலாக மாறியது. திரைத்துறையில் பல கிசுகிசுக்கள் வந்தாலும், எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.
சுமார் மூன்று ஆண்டுகால காதலுக்குப் பிறகு, இரு வீட்டு பெரியவர்கள் சம்மதத்துடன் 2012-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினி, கமல் என ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து இந்த ஜோடியை வாழ்த்தியது. திருமணத்திற்குப் பிறகும் சினேகா தொடர்ந்து படங்களில் நடிக்க பிரசன்னா உறுதுணையாக இருந்தது பலரது பாராட்டுகளைப் பெற்றது.

விஹான் மற்றும் ஆத்யந்தா: இந்தத் தம்பதியின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடுத்த அங்கமாக 2015-ஆம் ஆண்டு இவர்களுக்கு 'விஹான்' என்ற மகன் பிறந்தான். அதனைத் தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு 'ஆத்யந்தா' என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைகளுடனும், கணவருடனும் சினேகா அவ்வப்போது பகிரும் குடும்பப் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் எப்போதும் 'ஹாட் டாபிக்' தான். 14 ஆண்டுகால புரிதல்: இன்று தனது 14-வது திருமண நாளைக் கொண்டாடும் சினேகா, பிரசன்னாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் திருமண வாழ்க்கை குறித்து அழகாக பதிவிட்டுள்ளார்.
14 ஆண்டுகளாக: அதாவது, " கடந்த 14 ஆண்டுகளாக மகிழ்ச்சி, சவால்கள், சிரிப்பு மற்றும் கண்ணீர் என அனைத்திலும் உனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கடந்து வந்துள்ளேன். இன்றும், ஒவ்வொரு நாளும் நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வருகிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று, ஒன்றாக வளர்ந்து, கடினமான நாட்களைக் கடந்து, அழகான தருணங்களைக் கொண்டாடி, எண்ணற்ற நினைவுகளைச் சேர்த்திருக்கிறோம்.
மிகப்பெரிய காதல்: உண்மையைச் சொல்லப்போனால், 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, நம்முடைய மிகப்பெரிய காதல் கதை எது என்னைக் கேட்டால், ஒருவருடைய மூட் அவுட், பழக்கவழக்கங்கள் மற்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நாம் போட்டுக்கொள்ளும் சண்டைகள் தான். மேலும், இதையெல்லாம் தாண்டி இன்னும் நாம் ஒருவருக்கொருவர் சகித்துக் கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறோமே, அதுதான் காதலே. இன்னும் பல ஆண்டுகள்: யார் என்ன சொன்னாலும், அவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், நாமக்கு இடையே இருக்கும் இந்த உறவு உண்மையிலேயே மிகவும் அழகானது. அன்பு, பொறுமை, புரிதல் மற்றும் ஒற்றுமையால் கட்டப்பட்ட ஒரு பிணைப்பு இது.
இன்னும் பல ஆண்டுகள் இதே காதல், சிரிப்பு மற்றும் நினைவுகளுடன் பயணிப்போம். ஒருவரை ஒருவர் எப்போதும் வெறுப்பேற்றி கொண்டே அன்பால் இணைந்திருப்போம். லவ் யூ பிரசன்னா" என்று பதிவிட்டுள்ளார். அவரது திருமண நாள் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.