சிவகார்த்திகேயன் அம்மாவின் 70வது பிறந்தநாள்.. “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”.. செம போஸ்ட்!
தமிழ் சினிமாவின் புதிய வசூல் மன்னனாக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது அம்மாவின் 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி எனும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து எப்படியாவது மீடியாவில் சேர்ந்து சாதித்து விட வேண்டும் என நினைத்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்துக் கொண்டு கலக்கினார்.
பின்னர், அங்கேயே தனக்கான ஒரு இடத்தையும் தேடிக் கொண்டு அது இது எது, விஜய் அவார்ட்ஸ் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல பிரபலங்களுடன் நட்பாகினார். அதன் பின்னர், கடந்த 15 வருடங்களாக சினிமாவில் ஏகப்பட்ட சவால்களை சந்தித்து இன்று தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாகவே மாறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் சிறுவனாக இருக்கும் போதே அவருடைய தந்தையும் போலீஸ் அதிகாரியுமான தாஸ் உயிரிழந்தது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்தது என அமரன் படத்தின் வெற்றி விழாவில் அப்பா பற்றி உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன், அதன் பின்னர் தன்னை வளர்த்து இந்தளவுக்கு ஆளாக்கியதே அம்மா ராஜி தான் என்றார். மீடியாவில் பெரிய சம்பளம் இல்லை, நிரந்தரமாக வேலை இல்லை என்றாலும் தனது மாமா தனது மகளையே கட்டிக் கொடுத்தார் என்றும் நேசிப்பாய படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினர் தனக்கு எந்தளவுக்கு பலமாக இருந்தனர் என்பது குறித்து பேசியுள்ளார்.
40 வயதை கடந்து விட்ட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது அம்மாவுக்கு 70 வயதாகிறது என அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மன்னன் படத்தில் இடம்பெற்ற "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடல் வரிகளையும் ஷேர் செய்து போஸ்ட் போட்டுள்ளார்.
"அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே" ஹேப்பி பர்த்டே அம்மா என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.