இதனால தான் கருங்காலி மாலை அணிகிறேன்.. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
சில நடிகர்கள், நடிகைகள் ஒரே படத்தில், ஏன் ஒரே காட்சியில் கூட ரசிகர்கள் மனதில் நெருங்கிய இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் உதாரணமாக நடிகர் சூரியை சொல்லலாம்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில், 50 பரோட்டோ சாப்பிடும் ஒரு போட்டியில் பங்கேற்று, அந்த காமெடி மூலம் மிக பிரபலமானவர்தான் சூரி. இன்று கதாநாயகனாக மாறி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அதே போல் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்த இயக்குனர்களும் சிலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் ஒரே நாளில் தன் பக்கம் கவனம் திருப்பியவர்தான் இவர்.
அதன்பிறகு கைதி படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் பேசப்பட்ட படமாக அமைந்தது. 54 இரவுகளில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஹீரோயின் கிடையாது. பாடல் கிடையாது. ஆனாலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படமும், அதைத்தொடர்ந்து கமல் நடிப்பில் விக்ரம் படமும் லோகேஷ் கனகராஜூக்கு தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தை பெற்றுத் தந்தது.
இப்படி நான்கு படங்களை தொடர்ச்சியாக வெற்றிப்படமாக தந்து, முன்னிலை பெற்ற லோகேஷ் கனகராஜ், எல்சியு என்ற புதிய விஷயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதாவது அவரது முந்தைய படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை, சில கேரக்டர்களை தனது அடுத்தடுத்த படங்களில் கொண்டு வந்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ஆனால் விஜய் நடிப்பில் திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின். சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்த லியோ படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக லோகேஷ் கனகராஜூக்கு அமைந்தது. ஆனால் 600 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூலித்த இந்த படம் வெற்றிப்படமாகவே கருதப்பட்டது.
இதற்கிடையே அடுத்ததாக ரஜினி 171 படத்தை இயக்குவதற்கான ப்ரி புரடக்சன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். ரஜினி படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி வரும் அவர், தற்போது ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் என்ற இசை வீடியோ ஆல்பம் ஒன்றில் நெருக்கமாக அவருடன் நடித்துள்ளார். அது இப்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
லோகிண்ணா, உன் படத்துல காதல் செஞ்சா கழுத்தை வெட்டுவே, ஆனா அதையே கமல் பொண்ணு கூட நீ செய்வியா என அவரது ரசிகர்கள் கேள்வி கேட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் அவர் கருங்காலி மாலை அணிந்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், விக்ரம் படம் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன். அப்போது வழியில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது என்னுடைய நண்பர் கலை இயக்குனர் சதீஷ், இந்த கருங்காலி மாலையை தந்து அணிய சொன்னார். உன்னை சுற்றி இருக்கும் நெகட்டிவ் விஷயங்களை குறைக்கும் என்றார்.

எனக்கு அவர் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இல்லை.ஆனால் நண்பர் கொடுத்ததற்காக அதை அணிந்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
நண்பர் கொடுத்ததால் தான், அந்த அன்புக்காக இந்த கருங்காலி மாலை அணிகிறேன் என்று பலரது நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.