“விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..” அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..

“விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..” அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில் இரண்டு நடிகர்களின் படங்கள்தான் பெரிய அளவில் பேசப்படுகின்றன. பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் நடித்த படங்களின் லேட்டஸ்ட் அப்டேட், வெளியான அடுத்த சில மணி நேரங்களில் செம வைரலாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுகிறது. அந்த இருவர் நடிகர்கள் விஜய், அஜீத்குமார்தான்.

கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை படமாக அஜீத்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியானது. அந்த படத்துக்கு பிறகு, அஜீத்குமார் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

அதேவேளையில் விஜய் நடித்த லியோ படம், கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பும் 90 சதவீதம் முடிந்து விட்டது. இப்படி விஜய் படங்கள் சுறுசுறுப்பாக அடுத்தடுத்து வரும் நிலையில், அஜீத் படங்கள் வருவதில் அதிக தாமதம் நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசான்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் துவங்கியது. ஆனால் 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியும், படத்தின் பாதி வரை படப்பிடிப்பு முடிவடையவில்லை.

அஜர்பைஜானில் தொடரும் இயற்கை சீற்றங்களால் அடிக்கடி படப்பிடிப்பு தடைபட்டு, விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பியது. இதனால் அஜர்பைஜானுக்கும், சென்னைக்கும் பிளைட் பயணம் செய்தே நடிகர் அஜீத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சோர்ந்து போய் விட்டனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக விடாமுயற்சி ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதில் படத்தை தயாரிக்கும் லைகா புரடக்சன் நிறுவனம், நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் அதே வேளையில், அந்நிறுவனம் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தையும் தயாரித்து வருகிறது.

இரு படங்களையும் ஒரே நேரத்தில் லைகா நிறுவனம் தயாரித்த நிலையில், இதில் ஒரு படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. வேட்டையன் படம் வெளியான பிறகு, மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை துவக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருப்பதால், அந்த படத்தின் கணிசமான லாபத்தை வைத்துக் கூட விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நடத்தி விடலாம் எனவும், அதுவரை விடாமுயற்சி படப்பிடிப்பை நிறுத்தி வைக்க லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக துவக்கத்தில் பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இப்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக விடாமுயற்சி படத்தை லைகா புரடக்சன் நிறுவனம் கைவிட்டு விட்டதாகவும், அந்த படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி, மீதி படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சினிமா தயாரிப்பாளராக ஏற்கனவே, அஜீத்குமார் நடித்த படங்களை தயாரித்தவர் என்ற நிலையில், விடாமுயற்சி படத்தை அவர் வாங்கி தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

எனினும் விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்கிறது லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம் என்ற தகவல் பரவியதால் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES