விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது

விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது

நடிகர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.

விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.

மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.

இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES