புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.
புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்
மேலும் இந்நிகழ்ச்சியில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விஷால் நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.