அடுத்தடுத்து இரண்டு ஸ்டார்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ்

அடுத்தடுத்து இரண்டு ஸ்டார்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ்

சினிமாவில் 'சென்டிமென்ட்' என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே நூற்றாண்டு காலமாக இருந்து வருகிறது. அந்த சென்டிமென்ட்டுகளை சிலர் மட்டுமே தகர்த்து வருகின்றனர்.

திருமணம் முடிந்தால் நடிகைகளை மீண்டும் கதாநாயகிகளாக நடிக்க அழைக்க மாட்டார்கள், அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கவே அழைப்பார்கள் என்ற சென்டிமென்ட் சமீபத்தில் தகர்ந்தது. திருமணத்திற்குப் பின்பும் சில நடிகைகள் கதாநாயகிகளாகத் தொடர்கிறார்கள்.

நடிகைகளுக்கான மற்றொரு சென்டிமென்ட் தங்கை கதாபாத்திரங்களில் நடிப்பது. ஒரு நடிகை தங்கை கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் தொடர்ந்து அவரை தங்கை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பார்கள், கதாநாயகிகளாக நடிக்க அழைக்க மாட்டார்கள் என்பதும் உண்டு. அந்த சென்டிமென்ட்டிலிருந்து இன்னும் திரையுலகம் மாறவில்லை. அதை கீர்த்தி சுரேஷ் மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் தங்கையாக 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி. அடுத்து தெலுங்கில் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் சிரஞ்சீவி தங்கையாக 'போலா சங்கர்' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதல் பார்வை நேற்று வெளியானது. அடுத்தடுத்து இரண்டு ஸ்டார்களுடன் கீர்த்தி தங்கையாக நடிக்க சம்மதித்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் 'அண்ணாத்த' தவிர 'சாணி காயிதம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி. தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் உள்ள தங்கை சென்டிமென்ட்டை கீர்த்தி எப்படி கடந்து வரப் போகிறார் எனப் பார்க்க திரையுலகத்தினர் ஆர்வமாக உள்ளார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES