மணிரத்னத்தையும் விட்டு வைக்கவில்லை: போலி டுவிட்டர் கணக்கு துவக்கம்
பிரபலமானவர்களின் பெயரில் டுவிட்டர் கணக்கு துவங்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் பொழுதைகழிப்பவர்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்போதுமே மீடியாக்கள், சமுக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருப்பவர் மணிரத்னம். தனது படங்கள் குறித்துகூட அதிகம் பேச மாட்டார். எந்த கேள்விக்கும் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில்தான் பதில் சொல்வார்.
அப்படிப்பட்ட மணிரத்தினத்தின் பெயரிலேயே போலி டுவிட்டர் கணக்கை தொடங்கி விட்டார்கள். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டரில் அவர் இணைந்திருப்பதாக பரபரப்பை கிளப்பி விட்டார்கள்.
இதுகுறித்து சுஹாசினி மணிரத்னம் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: இயக்குநர் மணிரத்னம் டுவிட்டரில் பக்கம் தொடங்கியிருப்பதாக ஒருவர், டுட் செய்துள்ளார். இது பொய், இவர் ஒரு போலி நபர். இதைப் பற்றி அனைவருக்கும் தெரிவியுங்கள். என்று கூறியிருக்கிறார்.