Jana Nayagan: ஜன நாயகன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. தயாரிப்பாளர் குஷி.. விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆக ரெடியாக உள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை கடந்த ஜனவரி மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் வெளியீட்டுச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை இதுவரை ரிலீஸ் செய்ய முடியாமல் பிரச்னைகள் நடைபெற்றது. இப்படி இருக்கையில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை தற்போது தயாரிப்பாளர் தரப்பில் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் ஜன நாயகன். படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜனவரி மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சிலபல சிக்கல்களால் படம் வெளியாகவில்லை. அரசியல் காரணங்களால் தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்காமல் உள்ளார்கள் என்று விஜய் ரசிகர்கள் தரப்பில் பேச்சுக்கள் அடிபட்டது.
இப்படி இருக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜன நாயகன் படம் இணையத்தில் ஹெச்.டி தரத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை மொத்த படக்குழுவினருக்கும் ஏற்படுத்தியது. மொத்த திரையுலகமும் இதனைக் கண்டித்தது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் விஜய்: இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், விஜய் மே 7ஆம் தேதி முதலைமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உற்சாகம்: இந்நிலையில் விஜய்யின் ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை தயாரிப்பாளர் தரப்பில் முடிக்கிவிடப்பட்டுள்ளதாம். விநியோகஸ்தர்கள் பலரும் விற்பனை ஆகாத ஏரியாக்களில் கூடுதலாக பணத்தை கொடுத்து ஏரியாக்களை வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

பிளான்: விஜய் தற்போது அவரது அரசியல் பணிகளில் முழு கவனமாக இருப்பதால், அடுத்த சில வாரங்களுக்குள் அவரை நேரில் சந்தித்து, ரிலீஸ் தேதி குறித்து விவாதிக்க தயாரிப்பாளர் முடிவு எடுத்துள்ளாராம். அதுவும் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக விஜய்யை சுமார் இரண்டு நிமிட வீடியோ ஒன்றையும் பேசச் சொல்லிக் கேட்க தயாரிப்பாளர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.