சமந்தாவை விமர்சித்தமை தொடர்பில் நடிகர் சித்தார்த் விளக்கம்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.
இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில், ‘‘பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை” என்ற பதிவைப் பகிர்ந்தார். இந்தப் பதிவு மிகவும் சர்ச்சையானது.
நாகசைதன்யாவை மணப்பதற்கு முன்னால் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்ததாகக் பல வதந்திகள் பரவின. பின்னர் அவர்கள் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது.
எனவே தற்போது கணவரைப் பிரிந்த சமந்தாவை விமர்சிக்கும் வகையிலேயே சித்தார்த் இந்தப் பதிவை வெளியிட்டதாக வலைத்தளத்தில் பலரும் அவரைக் கண்டித்து வருகின்றனர்.
இது தொடர்பில் நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்த அவர்,‘‘யாரையும் மனதில் வைத்து அந்தப் பதிவை நான் வெளியிடவில்லை. யாருடையை பெயரையும் தேவை இல்லாமல் இழுக்க வேண்டாம். சமூக வலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பு அல்ல. நான் அன்றைய தினம் வாழ்க்கை குறித்து இயக்குனர் அஜய்பூபதியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். எனது வாழ்க்கையில் நடந்த விஷயம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தேன். எங்கள் வீட்டுக்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால் என்னைத்தான் அவர் அப்படி சொன்னார் என்று யாரும் வேறுவிதமாகப் புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது” என்றார்.