ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்துள்ள புதிய படம் ‘திட்டம் இரண்டு.’
திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி உள்ளது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.